சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், 100 வயதாகியுள்ள அவருக்கு வயது மூப்பு காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதயம் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மருத்துவமனை இயக்குநரும், மூத்த இதய சிகிச்சை நிபுணருமான மருத்துவர் தில்லை வள்ளல் தெரிவித்துள்ளார்.