கண்ணகி நகர்: சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு மின்சார வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி (30) இவர்களுக்கு இவருக்கு 10 வயதில் யுவஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 8 வயதில் மணி என்ற ஆண் குழந்தையும் உள்ளது. வரலட்சுமி கண்ணகி நகர் பகுதியில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை ( ஆக.23) வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 2 மணி முதல் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் வீட்டில் இருந்து பணிக்காக திருவான்மியூர் சென்ற நிலையில் கண்ணகி நகர் 11 வது குறுக்கு தெருவில் நடந்து செல்லும்போது சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் சாலை குறுக்கே சென்ற மின்சார வயரில் இருந்து மின்சாரம் கசிந்து வரலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சக தூய்மை பணியாளர்கள் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு சுமார் 50 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார வயரை பூமிக்கு அடியில் புதைக்காமல் சாலை மேலே அலட்சியமாக போடப்பட்டு இருந்ததால் தூய்மை பெண் பணியாளர் உயிரிழந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் ஆங்காங்கே மின்சார பெட்டியில் வயர்கள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதும், பலமுறை மின்வாரிய துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்தாருக்கு மின்சார வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவியை வழங்கினார். பின்னர் உயிரிழந்த வரலட்சுமியின் பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்பதாக அவர் தெரிவித்தார்.