காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டம், முராத்நகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், மீரட் பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சிவம் உஜ்வாலுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் முராத்நகர் போலீஸ் நிலையத்தில் புது மனைவி நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: திருமணத்துக்குபிறகு மீரட்டில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றபோது, பாலிவுட் நடிகை நோரா பதேகி போன்று மனைவி வேண்டும் என்று கணவர் வலியுறுத்தினார். என்னை உடற்பயிற்சி கூடத்துக்கு அனுப்பி தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய நிர்பந்தம் செய்தார்.
உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் என்னை பசி, பட்டினியில் வாடச் செய்தார்.நீ உயரமாக இல்லை. அழகாக இல்லை என்று கூறி நாள்தோறும் கணவர் அவமானப்படுத்தி வந்தார். தற்போது எனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டேன். விவாகரத்து செய்துவிடுவதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டுகின்றனர்.எனது நகைகளை கணவர் குடும்பத்தினர் பறித்து வைத்துள்ளனர்.
கணவர், அவரது தந்தை மற்றும் சகோதரிகள் சேர்ந்து என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களால்தான் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து குடும்ப வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.