திருநெல்வேலி: திருநெல்வேலியில் இன்று நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசுகிறார். பாஜக சார்பில் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழகம் முழுவதும் 7 இடங்களில் நடைபெற உள்ளது. முதல் மாநாடு நெல்லையில் இன்று நடைபெறுகிறது. வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.10 மணிக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்கிறார். மாநாடு முடிந்ததும் ஹெலிகாப்டரில் மீண்டும் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். அமித் ஷா வருகையையொட்டி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.