மதுரை: தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை (பேரிகேட்) அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த அழகேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இரும்புத் தடுப்புகள்…. சாலைகளில் வாகனங்களின் வேகத்தை முறைப்படுத்த உரிய இடங்களில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்படுவது வழக்கம். இது அவசரக் காலங்களில் போக்குவரத்து மாற்றத்துக்காக வைக்கப்படுகிறது. அவ்வாறு வைக்கப்படும் தடுப்புகளில் எந்த தனியார் விளம்பரங்களும் இடம்பெறக் கூடாது. ஆனால் தமிழகத்தில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் தனியார் விளம்பரங்கள் நிரம்பியுள்ளன.
2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு: இதனால் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் தனியார் விளம்பரங்களுடன் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றவும், தமிழ்நாடு உள்ளாட்சி விதிப்படி தடுப்புகளை சரியான அளவில் வைக்கவும், சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியும் வகையில் அவை இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.