காஞ்சிபுரம்: ‘சினிமாவில் நடித்து, பணம் சம்பாதித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி சிலர் தொடங்குவதோடு, எடுத்த உடன் எல்லாம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே உயர முடியும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் விடுதியில் பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாடினார். அப்போது காஞ்சிபுரம் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பினர் அவரை சந்தித்தனர்.
அவர்கள் பட்டு இழை, சரிகை விலை குறைப்பு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா, கூட்டுறவு சங்கங்களுக்கு வருடத்துக்கு ரூ.50 கோடி மானியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதேபோல் வணிகர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
விளைபொருட் களுக்கு கூடுதல் விலை, இடு பொருட்களை இலவசமாக வழங்குவது, ஏரி, குளங்களை தூர் வாருவது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். வரி ஏற்றம் தொடர்பாக வணிகர்களும் குறைகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குமரக்கோட்டம் பகுதியில் பழனிசாமி பேசியதாவது: இப்போதெல்லாமல் சினிமாவில் நடித்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் கட்சி ஆரம்பிக்கின்றனர். உடனே எல்லாம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். நான் 50 ஆண்டுகால அரசியல் மூலம் படிப்படியாக உயர்ந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதிமுகவில் மட்டுமே உழைப்பும் விசுவாசமும் இருந்தால் உயர முடியும்.
புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட அதிமுக தலைவர்களைத் தான் உதாரணமாக கூறுகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் நலத்திட் டங்களை செயல்படுத்தியவர்கள் நமது தலைவர்கள். தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியது அதிமுகதான். அதேபோல் 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கினோம். விவசாயத்துக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம். குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன.
அதிமுக ஆட்சிக்கு வந்தால், வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் தொடரும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட மடிக்கணினி வழங்கப் படும். அதிமுக ஆட்சியில் மக்கள் மன நிறைவு பெறும் வகையில் பல லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப் படும். திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
மணமகளுக்கு பட்டுப் புடவையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும் என்றார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்டச் செயலர் வி.சோமசுந் தரம், அமைப்புச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.