புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரான மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் மாநிலங்களவை செயலர் பி.சி.மோடியிடம் இண்டியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது, இண்டியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். சுதர்சன் ரெட்டியின் மனுவை இண்டியா கூட்டணி எம்.பி.க்களில் 20 பேர் முன்மொழிந்தனர். 20 பேர் வழிமொழிந்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக் கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற 25-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
செப்.9-ம் தேதி நாடாளுமன்ற அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் தேர்தலில் வாக்களிப்பார்கள். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.