சென்னை: பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்ததால், தஞ்சை திருப்புவனம் பாமக நகரச் செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க, தலைமறைவாக இருக்க இடம் கொடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தில் நடத்திய சோதனையில் தேனி, திண்டுக்கல், வாணியம்பாடி ஆகிய இடங்களில் கோவை போத்தனூரைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், குனிய முத்தூரை சேர்ந்த அஷ்ரப் அலி, வாணியம்பாடியை சேர்ந்த முஸ்டாக் அகமது ஆகிய பயங்கர வாதிகளை கண்டறிந்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் மூலமாக கைது செய்துள்ளது.
என்ஐஏ நடத்திய சோதனையில் கொடைக்கானலில் ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வரும் இன்பதுல்லாவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதை இந்து முன்னணி தொடர்ந்து தமிழக அரசுக்கு எடுத்துக்காட்டி எச்சரித்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை அமைதி பூங்கா என்று சொல்லி, தன்னையும் தமிழக மக்களையும் ஏமாற்ற வேண்டாம். தமிழகம் பயங்கரவாதிகளின் சொர்க பூமியாக, பாதுகாப்புப் பதுங்கு குழியாக, பயிற்சிக்களமாக மாறி உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.