சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை கருத்தியல் யுத்தமாக முன்னெடுக்க காங்கிரஸ், திமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்வாக குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் பாஜக தலைமை தமிழகத்தை முக்கிய இடத்தில் வைத்திருப்பதாகவும் ஒரு தமிழருக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் தேர்தலின்போது வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதனால் இண்டியா கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதற்கான எதிர்பார்ப்பு கிளம்பியது. திமுக எம்.பி. திருச்சி சிவா வேட்பாளர் போட்டியில் இருப்பதாக பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இண்டியா கூட்டணி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளதாக இண்டியா கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம்: தொடக்கத்தில் இருந்தே இண்டியா கூட்டணித் தலைவர்களுக்குள் சுமூகமான நிலை இல்லை. திமுக கூட்டணி சார்பில் சார்பில் மயில்சாமி அண்ணாதுரை பெயர் முன்மொழியப்பட்டது. அவ்வாறு தமிழர் ஒருவரை நிறுத்தும்பட்சத்தில் தமிழர் எதிர் தமிழர் என்ற நிலை உருவாகும். அதேநேரம், நாடு தழுவிய அளவில் தேர்தல் பேசப்பட வேண்டும் என காங்கிரஸ் கருதியது. இதனால் மயில்சாமி அண்ணாதுரையை ஏற்பதில் கூட்டணித் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை.
இதனாலேயே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இவ்வாறு தெரிவித்தனர். ஆனால், இந்த அறிவிப்பின் மூலம் தமிழரா, கூட்டணியா என்ற தர்மசங்கடமான நிலைக்கு திமுக ஆளாகியுள்ளது. இதே நிலையை 1987-ம் ஆண்டு திமுக எதிர்கொண்டது.
அப்போது, குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஆர்.வெங்கட்ராமனுக்கு திமுக ஆதரவளிக்கவில்லை. இதை சுட்டிக்காட்டி அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், “தமிழகத்தில் சில கட்சிகள் தமிழருக்கு ஆதரவளிப்பதில்லை” என விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, “அவர் ஒரு தமிழரா என்பதை விட, தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்பது தான் முக்கியம்” என தெரிவித்திருந்தார். இதேபோல், தற்போதைய சூழலையும் கருத்தியல் யுத்தம் என்ற கோணத்தில் அணுக திமுக முடிவு செய்துள்ளது. இதற்கான பிரச்சாரத்தை உடனடியாக கூட்டணி கட்சிகள் மூலமாக தொடங்கிவிட்டது.
அந்த வகையில் விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் சமூக வலைதளப்பதிவில், “அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டிக்கும் இடையில் நடக்கும் இந்தப் போட்டி ஒரு கருத்தியல் போட்டியாகும். அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் தெளிவாகவே இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழருக்கு எதிரான திமுக என்று பாஜக பிரச்சாரம் செய்யும்பட்சத்தில் அது திமுகவுக்கு பாதகமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.