சேலம்/தருமபுரி: மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை தொடர்கிறது.
நடப்பாண்டில் முதல்முறையாக, ஜூன் 29-ல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டி, நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர் மட்டம் குறைவதும், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது, நீர்மட்டம் உயருவதுமாக இருக்கிறது.
கர்நாடக அணையில் நீர்திறப்பு: கடந்த ஜூன் 29, ஜூலை 5, ஜூலை 20, ஜூலை 25 என நடப்பாண்டில் ஏற்கெனவே, 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.56 அடியாக இருந்தபோது, பருவமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதும் அவற்றில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் உபரிநீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 1.08 லட்சம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 119.02 அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. இதனிடையே, அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, நேற்று அதிகாலை 4 மணியளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டி, நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பி சாதனை படைத்தது.
இதற்கிடையே, அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 69 ஆயிரத்து 736 கனஅடியாக குறைந்தது. எனினும், அணை நிரம்பி உள்ளதால், இரவு 8 மணி நிலவரப்படி 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
ஒகேனக்கல் நிலவரம்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் விநாடிக்கு 78 ஆயிரம் கனஅடியாகவும், காலை 7 மணியளவில் 88 ஆயிரம் கனஅடியாகவும், 8 மணியளவில் 98 ஆயிரம் கனஅடியாகவும், 10 மணியளவில் 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 8 மணியளவில் 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாகவும், மாலை 4 மணி நிலவரப்படி 57 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து குறைந்தது.
குளிக்க, பரிசல் இயக்க தடை: கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில் ஒகேனக்கல் காவிரியிலும் நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம், அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.