திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விச் சென்று கடித்துக் குதறிய தெரு நாய், காப்பாற்றச் சென்ற பாட்டி யையும் கடித்தது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேல்கொண்டாழி கிராமத்தைச் சேர்ந்தவர் அபுதாகிர். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுல்தான்பீவி(26). இவர்களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
சுல்தான் பீவி, தனது தாய் மல்லிகா பீவி(44) மற்றும் குழந்தை அஜ்மல் பாஷாவுடன் மேலகொண்டாழி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சுல்தான் பீவி, வீட்டில் தனது குழந்தை அஜ்மல் பாஷாவை பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தார்.
மல்லிகா பீவி வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தார். திடீரென வீட்டுக்குள் புகுந்த ஒரு தெரு நாய், தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விக்கொண்டு ஓடியது. குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த மல்லிகா பீவி, நாயை துரத்திச் சென்றார். அப்போது, குழந்தையை கீழே போட்ட நாய், குழந்தையின் தலை, கை, கால், காது உள்ளிட்ட பகுதிகளில் கடித்தது.
மேலும், தடுக்கச் சென்ற மல்லிகாபீவியையும் கடித்து காயப்படுத்தியது. பின்னர், அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று நாயை விரட்டிவிட்டு, மல்லிகா பீவி மற்றும் குழந்தையை மீட்டு, கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.