மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புடன், மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா நேற்று கூறியதாவது: அமெரிக்காவிடமிருந்து ஏராளமான அழுத்தங்கள் மற்றும் தடைகள் உள்ள போதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். தள்ளுபடிகளைப் பொறுத்தவரை அது ஒரு வணிக ரகசியம். எனினும், பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு தள்ளுபடியின் அளவு 5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு எவ்ஜெனி கிரிவா தெரிவித்தார்.
ரஷ்ய துணைத் தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறும் போது, “இந்தியா சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், எங்களது உறவில் நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும்” என்றார்.