சென்னை: திமுக பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி(80). இவர்களுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உட்பட 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் ரேணுகா தேவி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலமானார்.
இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள டி.ஆர்.பாலுவின் இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று ரேணுகா தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன், இரா.முத்தரசன், உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.