வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 15-ம் தேதி அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, நேட்டோ தலைவர் மார்க் ரூட் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.
இதன்பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த ஐரோப்பிய தலைவர்களும் வாஷிங்டனில் குவிந்துள்ளனர். அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது.
குறிப்பாக உக்ரைனின் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. உக்ரைனின் பாதுகாப்புக்கு அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்திருக்கிறார். உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கவும் அவர் முன்வந்திருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன். முதலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் முன்னேற்றம் ஏற்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது: நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. எனினும் அந்த நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். குறிப்பாக உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வோம். உக்ரைனுக்கு அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்து பரிசீலனை செய்வேன்.
இதுவரை 6 போர்களை நிறுத்தி உள்ளேன். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் சூழல் உருவானது. அந்த போரை நிறுத்தினேன். தற்போது ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரையும் நிறுத்துவேன். ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது போருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். எப்போது போர் நிறைவடையும் என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் போருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.