சென்னை: ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி பார்வையிடவுள்ளார்.
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, விதிகளுக்கு முரணாக சென்சார் போர்டு இந்த ஆட்சேபங்களை தெரிவித்துள்ளதாகவும், 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க கூறியுள்ளதாகவும் வெற்றிமாறன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு மாற்று நிவாரணம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, உயர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா என ஆய்வு செய்ய படத்தை பார்க்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆகஸ்ட் 24-ம் தேதி இசைக் கல்லூரியில் உள்ள திரையரங்கில் ‘மனுஷி’ படத்தை பார்வையிட ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். அப்போது, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தீர்மானித்த சென்சார் போர்டு குழு உறுப்பினர்களும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறனும் படம் பார்வையிடும் நாள் அன்று இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே படத்துக்கு சென்சார் சான்று வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கில் ஆட்சேபகரமான காட்சிகளை வெற்றிமாறனுக்கு தெரிவிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.