மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், நடிகை ஸ்வேதா மேனன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சங்கத்துக்கு ஒரு பெண், தலைவராவது இதுவே முதன் முறை. முக்கிய நிர்வாகிகளின் பதவிகளையும் நடிகைகளே கைப்பற்றினர்.
சில வருடங்களுக்கு முன், நடிகர் சங்க நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த சில முன்னணி நடிகைகள், சங்கத்தில் இருந்து வெளியேறினர். அப்படி விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று விரும்புவதாக, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்வேதா மேனன் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட பிரச்சினையில் நடிகர் சங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, நடிகை பாவனா, சங்கத்தில் இருந்து வெளியேறினார்.
அவரிடம் சங்கத்தில் மீண்டும் சேர்வது குறித்து கேட்டபோது, “நான் நடிகர் சங்கத்தில் இப்போது, உறுப்பினராக இல்லை. அதனால், சங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து எனக்கெதுவும் தெரியாது. சரியான சந்தர்ப்பம் ஏற்பட்டால் அது குறித்து பேசுவேன்” என்று தெரிவித்துள்ளார்.