ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை (செவ்வாய்கிழமை) ரயில் மறியல் போராட்டம் நடத்துவுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 2 மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு மாதம், ஓராண்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யய வேண்டும், கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திரத் தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும், ஆகஸ்ட் 13 அன்று கண்டன ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 15 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நாளை (செவ்வாய் கிழமை ) மீனவர்கள் தங்கக்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.