சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் பாண்டியன் விரைவு ரயில் உள்பட முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.
நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி (திங்கள்கிழமை ) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில், பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாக, அக்.16-ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் 2ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
சென்னையில் இருந்து, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு முறையே புறப்படும் பாண்டியன், பொதிகை , நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி ஆகிய ரயில்களில் விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில், டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
குறிப்பாக, பாண்டியன், பொதிகை ஆகிய விரைவு ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணி நிலவரப்படி, காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து, “ரெக்ரெட்” என்று வந்தது. இதுதவிர, சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் திருநெல்வேலி, நாகர்கோவில் வரை செல்ல டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.
இதுபோல, சென்னையில் இருந்து தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு புறப்படும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் 2ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளுக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது. முக்கிய ரயில்களில் அனைத்திலும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.