சென்னை: சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று, தமிழக அரசால் அமைக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகளை ஆராயும் உயர்நிலைக்குழுவிடம் பரிந்துரை வழங்கப்பட் டுள்ளது.
மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவின் கூட்டம் சென்னையில் கடந்த 14-ம்தேதி நடந்தது. குழு உறுப்பினர்கள் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் எம்.நாகநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் நிகழும் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விரிவான அறிக்கையை மாநில திட்டக்குழு உறுப்பினர் நா.எழிலன் எம்எல்ஏ சமர்ப்பித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுகாதாரம், மருத்துவக் கல்விமத்திய அரசு பின்பற்றும் ஒற்றை ஆட்சி அணுகுமுறை காரணமாக இந்தியாவில் சுகாதாரத் துறை மிகவும் சிக்கலான இடத்தில் நிற்கிறது. இந்திய அரசியல் சாசனம் கூட்டாட்சி நிர்வாக முறையை வலியுறுத்தும் நிலையில், மத்திய அரசு அதற்கு நேர்மாறாக சுகாதார கொள்கைகளை சிதைத்ததால், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் மாநில அரசின் சுயாட்சி அழிந்துபோனது.
மாநிலப் பட்டியலில் இருந்த மருத்துவக் கல்வி 42-வது திருத்தம் மூலம் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இந்திய மருத்துவகவுன்சிலுக்கு பதிலாக தேசியமருத்துவ ஆணையம் ஏற்படுத்தப் பட்டது. அந்த ஆணையத்தால் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டங்களுக்குத்தான் நீட் தேர்வு சாதகமாக உள்ளது. மாநில பாடத்திட்டத்தில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீட் தேர்வால் நகர்ப்புற, வசதி படைத்த, ஆங்கிலவழி கல்வி மாணவர்கள்தான் பெரிதும் பயன் அடைந்துள்ளனர் என்பதை தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெளிவாக சுட்டிக்காட்டியது. அரசு மருத்துவக்கல்லூரிகளில், கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் பிரதிநிதித்துவம் 14.9 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்தது.
சுகாதாரமும், மருத்துவக் கல்வியும் சிறப்பாக இருக்க வேண்டுமானால், தற்போதைய தேசிய மருத்துவ ஆணையத்தை நீக்கிவிட்டு, மீண்டும் இந்திய மருத்துவகவுன்சிலை ஏற்படுத்த வேண்டும். மருத்துவக் கல்வி நிறுவனங்களுக் குரிய விதிமுறைகளை உருவாக்கும் பொறுப்பும், அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரமும் மாநில அரசிடம்தான் இருக்க வேண்டும். சுகாதாரம், மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், இந்த துறைகளில் மாநிலங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.