சென்னை: மாநில நெடுஞ்சாலை துறையினர் அண்ணா சாலையில் (தேனாம்பேட்டை சிக்னல் – அண்ணா அறிவாலயம் பகுதிக்கு இடையே உள்ள பகுதி) 3.2 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் கட்டி வருகின்றனர்.
இந்த கட்டுமானப் பணியை எளிதாக்க தேனாம்பேட்டை அருகே நாளை (17-ம் தேதி) முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா சாலையில் சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி தியாகராய சாலை, ம.பொ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவா சாலை சந்திப்பு வழியாக அண்ணா சாலையை அடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள ம.பொ.சி. சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவா சாலை வழியாகச் சென்று அண்ணா சாலையை அடையலாம்.
தெற்கு போக் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ம.பொ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவா சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவா சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.