சென்னை: கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது, துணைவேந்தர் நியமன விவகாரம் ஆகியவற்றில் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் அவர் இன்று மாலை அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கருத்து தெரிவித்து, செயல்பட்டு வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் நடைபெறும் அழகப்பா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அரசியல் சார்பு தன்மை: அதுமட்டுமன்றி, பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை தமிழக அரசு பெற்ற பிறகு, பாஜக நிர்வாகி குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவை பெற்றார். அந்த தடை உத்தரவை நீக்க உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியுள்ளது.
இந்த சூழலில், பாஜக பிரமுகர் தெரிவித்த கருத்துகளை ஆதரிக்கும் வகையில், ஆளுநர் முந்திக்கொண்டு போய் உச்ச நீதிமன்றத்தில் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்புத்தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலை பட்சமான நடவடிக்கைக்கும் ஒரு உதாரணமாக உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழங்களில் இன்று துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளுநரின் செயல்பாடுகளும், அவர் போட்டுவரும் முட்டுக்கட்டைகளும்தான் காரணம். இந்த சூழ்நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி (இன்று) நடைபெறும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளும் புறக்கணிப்பு: சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் சார்பில் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.
விஜய்யின் தவெகவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியும் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.