கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி தனி தொகுதி. அமைச்சர் கணேசன் தான் இப்போது இங்கு எம்எல்ஏ. திமுக-வை தவிர மற்ற பிரதான கட்சிகள் எதுவும் திட்டக்குடிக்கு பெரிதாக எந்தத் திட்டமும் வைத்திருக்காததால், தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் கணேசன், 2026 தேர்தலிலும் இங்கே வெற்றிக்கொடி நாட்டுவதற்கான வேலைகளில் வேகமாக இருக்கிறார்.
2011 வரை மங்களூர் தனி தொகுதியாக இருந்த இந்தத் தொகுதியில் 2001-ல் விசிக தலைவர் திருமாவளவன் திமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். ஆனால், திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2004-ல் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து வந்த இடைத் தேர்தலில், முன்னாள் எம் எல்ஏ-வான கணேசன் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அடுத்து வந்த 2006 பொதுத் தேர்தலில் தற்போதைய காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை விசிக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2011 தொகுதி மறுசீரமைப்பின் போது மங்களூர் தொகுதியானது திட்டக்குடியாக மாறியது.
2011-ல் இங்கு தேமுதிக-வைச் சேர்ந்த தமிழழகன் எம்எல்ஏவானார். 2016-ல் மீண்டும் கணேசன் எம்எல்ஏ ஆனார். கடந்த தேர்தலிலும் மீண்டும் கணேசனே வெற்றிபெற்று, இப்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராக இருக்கிறார். இந்தத் தொகுதியில் ஒன்றுக்கு நான்கு முறை எம்எல்ஏ-வாகி இருக்கும் கணேசன். ஐந்தாவது முறையாகவும் வெற்றிக்கொடி நாட்ட தொகுதிக்குள் பம்பரமாய் சுற்றி வருகிறார்.
1984-க்குப் பிறகு நடைபெற்ற 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரே ஒருமுறை மட்டுமே அதிமுக இங்கு போட்டியிட்டது. அப்போதும் அந்தக் கட்சியால் ஜெயிக்கமுடியவில்லை. இதனால் இந்தத் தொகுதியை கூட்டணிக் கணக்கில் வைத்திருக்கிறது அதிமுக. அதிமுக இங்கு பிரகாசிக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் தேர்தலில் போட்டியிடுமளவுக்கு பரிச்சயமான முகங்கள் அந்தக் கட்சிக்கு இல்லாதது தான் என்கிறார்கள். இன்னொரு பக்கம், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழித்தேவனும் கணேசனும் பள்ளித் தோழர்கள் என்பதால் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் நடத்துவதில்லை என்கிறார்கள். இந்தப் புரிதலும் கணேசனுக்கு சாதகமாக இருக்கிறது.

2021-ல், இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக்கொடுத்த அதிமுக, இம்முறையும் அதற்கு தயாராகவே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அதிமுக தரப்பில் யாருமே தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். வெற்றிபெற முடியுமா முடியாதா என உறுதியாக தெரியாவிட்டாலும் பாஜக தரப்பில் முன்னாள் எம்எல்ஏ-வும் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவருமான தமிழழகன் கணேசனை எதிர்த்து களமிறங்க தயாராக இருக்கிறார்.
இதனிடையே, வாக்காளர்களை வசப்படுத்த வாரத்தில் 3 நாட்கள் திட்டக்குடியையே சுற்றிவருகிறார் அமைச்சர் கணேசன். பெண்களிடம், “என்ன அக்கா… தையல் மிஷின் கிடைச்சுதா? என்ன ஆயி… ஸ்டாலின் பணம் (மகளிர் உரிமைத் தொகை) வருதா?” என்றெல்லாம் உரிமை எடுத்துப் பேசி வருகிறார். “அமைச்சர்களும் எம்எல்ஏ-க்களும் தங்கள் தொகுதியில் இருந்து மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யவேண்டும்” என முதல்வர் அறிவித்த பிறகு, திட்டக்குடியே கதி எனக் கிடக்கிறார் கணேசன். கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், சொந்தக் கட்சிக்குள்ளும் தனக்கெதிராக யாரும் முளைத்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்.
அமைச்சர் கணேசனை எதிர்க்க அதிமுக-வில் வலுவான வேட்பாளர் யாருமே இல்லை என்கிறார்களே என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவனிடம் கேட்டதற்கு, “அமைச்சரை எதிர்க்க அதிமுக-வில் வலுவான வேட்பாளர் இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. கணேசன் எதிர்முகாமின் மாவட்டச் செயலாளர். அப்படி இருக்கையில் எனது கட்சிக்குத் தான் நான் விசுவாசமாக இருக்கமுடியும். மற்றபடி, நானும் அவரும் பள்ளித் தோழர்களாக இருப்பதால் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்வதில்லை என்று சொல்வதெல்லாம் தவறான தகவல்” என்றார்.
திட்டகுடியை விட்டு போகவே மாட்டேன் என்கிறீர்களே என அமைச்சர் கணேசனிடம் கேட்டதற்கு, சிரித்துக் கொண்டே பதில் சொன்னவர், “மீண்டும் தளபதி ஆட்சி தொடரவேண்டும். அவர் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் மக்களை சென்றடைந்திருக்கிறதா என்பதை நேரடியாகச் சென்று பார்த்து வருகிறேன். மக்கள் என்னிடம் அளவற்ற அன்புடன் இருக்கிறார்ர்கள். தங்களுக்கானதை உரிமையோடும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்” என்றார்.
தேர்தலுக்கு 10 மாதம் இருக்கும் போது மட்டும் இப்படி கரிசனம் காட்டாமல் ஐந்து ஆண்டுகளும் இப்படியே இருந்தால் மக்கள் ஏன் சார் உங்களை மறக்கப் போகிறார்கள்?