சென்னை: ஜப்பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையில், செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான கோகி ஹோல்டிங் ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அதன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15-க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சேவை மையங்களுடன் விரிவான வலையமைப்பை கொண்டுள்ளது.
ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள தொழிற்பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.