தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நாளை (ஆக. 16) நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி பூஜைக்காக கடந்த 29-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. பின்னர் 30-ம் தேதி ஒருநாள் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு நடைசாத்தப்பட்டது. இந்நிலையில், சிம்ம மாதத்துக்காக (ஆவணி) நாளை மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
கேரளாவில் சிம்ம மாதமே மலையாளப் புத்தாண்டு கொண்டாடப்படும் மாதமாக உள்ளது. சிம்ம மாதம் 20-ம் தேதி (செப்.5) கேரளாவின் சிறப்பு வாய்ந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செப்.3-ம் தேதி மீண்டும் நடை திறந்து வழிபாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.