புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரும் மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதையடுத்து,அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி கல்வியாளர் ஜாஹூர் அகமது பட் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபல் சங்கரநாராயணன், இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.
இதையடுத்து, இந்த மனு மீது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.