திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடம் பட்டத்தை பெறாமல் மாணவி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மைக்ரோ பைனான்ஸ் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற ஜின் ஜோசப் என்ற மாணவி இவ்வாறு செய்ததாக தகவல் கூறப்படுகிறது.
பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 759 மாணவ, மாணவியருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பட்டங்களை வழங்கினார். அதில் 109 பேர் (மாணவர்கள் 13, மாணவிகள் 96) தங்கப்பதக்கமும், 650 பேர் (மாணவர்கள் 108, மாணவிகள் 542) முனைவர் பட்டங்களும் பெற்றனர். இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 11638 மாணவர்கள், 25738 மாணவிகள் என்று மொத்தம் 37376 பேர் பட்டம் பெற்றனர். மும்பையிலுள்ள இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநர் பேராசிரியர் அ.பி. டிம்ரி பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் ந. சந்திரசேகர் வரவேற்று, அறிக்கை வாசித்தார். சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ், தேர்வாணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.