சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், பின்பு கருத்து வேறுபாடுகளால் அதிலிருந்து விலகினார். தற்போது வெளியாகியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு விளக்கம் அளித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: மாநிலக் கல்விக் கொள்கை- 2025 கல்வியாளர்கள், பாடத்திட்ட நிபுணர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நல அமைப்புகள், பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டன. இது அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப மாறுதல்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.
இந்த கொள்கை தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்துவதை வலியுறுத்துகிறது. உயர்கல்வி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை எதிர்க்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதையும், தமிழ் மொழியை மேம்படுத்துவதையும், அதேநேரத்தில் உலகளாவிய ஈடுபாட்டுக்கு மாணவர்களை தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் உள்ளூர் முடிவெடுத்தலை வலுப்படுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை, நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை மாநிலக் கல்விக் கொள்கை வெளிப்படையாக மறுக்கிறது. 10+2 அமைப்பையும் தொடர்ந்து தக்க வைத்துள்ளது. கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது. தனியார்மயமாதலுக்கு எதிரானது.
அதேபோல், மாநில கல்விக் கொள்கையில் எந்த ஒரு பகுதியும் சிறுபான்மையினர் பாதுகாப்பை குறைக்கவில்லை. அனைத்து வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுவினர்களிடம் உள்ள கற்றல் இடைவெளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி உதவி மற்றும் குறைதீர் கற்றலை வழங்க கொள்கை உறுதி செய்கிறது.
இது தமிழகத்தின் கல்வித் தனித்துவத்தைப் பாதுகாத்து உலகளாவிய சவால்களுக்கு கற்போரைத் தயார் செய்கிறது. அதனுடன் மாநில சுயாட்சியை நிலைநிறுத்தி, சமூக நீதியை வலுப்படுத்தி, நலத்திட்டங்களை மேம்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.