விழுப்புரம்: மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது என்று தேர்தல் ஆணையத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னையில் கடந்த 9-ம் தேதி அன்புமணி கூட்டிய பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக அவர் ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பப்பட்ட கடிதத்தை, அவரது தனிச் செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த மே 30-ம் தேதி முதல் கட்சித் தலைவராக உள்ளார். செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், எந்த அங்கீகாரமும் இல்லாமல், எம்எல்ஏ மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்களை பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிவித்து வருகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட செயல் தலைவர் பதவியை ஏற்காமல், போட்டியாக செயல்படுகிறார். கட்சியின் விதிகளை மீறி செயல்படும் அவரை சஸ்பெண்ட் செய்வது அல்லது கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுயலாபத்துக்காக செயல்படும் அன்புமணியின் நடவடிக்கைகளை கட்சி ஏற்கவில்லை. செயல் தலைவராக உள்ள அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது. நிறுவனரின் ஒப்புதல் பெறாமலும், அவருக்கு அழைப்பு விடுக்காமலும், கட்சியின் விதி
களை மீறி பொதுக்குழுவை நடத்தி உள்ளார். பாமக தலைவர் பதவியில் மேலும் ஓராண்டுக்கு தொடர்வதாக அவராகவே அறிவித்துக் கொண்டுள்ளார்.
பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸின் அனுமதி இல்லாமல் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்பு மணிக்கு உரிமை மற்றும் அதிகாரம் இல்லை. அவர் சாதாரண செயல் தலைவர்தான் என்பதை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.