பெரும்பாக்கம்: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து ரூ.233 கோடி மதிப்பீட்டில் 55 மின்சார ஏ.சி. பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என மொத்தம் 135 மின்சார பேருந்துகளின் சேவைகள், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் ரூ.49.56 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரும்பாக்கம் மின்சாரப் பேருந்து பணிமனை ஆகியவற்றின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர், செங்கை ஆட்சியர் தி.சினேகா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி பெரும்பாக்கத்தில் மின்சார பேருந்துகளை பராமரிப்பதற்காக புனரமைக்கப்பட்ட பணிமனையும், 135 தாழ்தள மின்சாரப் பேருந்துகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மகளிருக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், தாழ்தள மின்சாரப் பேருந்துகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய மாதாந்திர பயணச் சீட்டு ரூ.2,000 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக துணை முதல்வர் பெரும்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி மற்றும் சி.எம்.டி.ஏ நிதி ரூ.1 கோடி என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கலையரங்கத்தை திறந்து வைத்தார்.