சென்னை: முன்னணி பெரு நிறுவனங்களுக்கு வாகன சேவை வழங்கி வரும் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் தற்போது ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதன் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) அனிருத் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அனிருத் அருண் கூறியதாவது: போக்குவரத்து என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்றடைவது மட்டுமல்ல, அதில் நம்பிக்கை, கண்ணியம் மற்றும் சிறப்பான சேவை உள்ளடங்கியுள்ளது.
கடந்த 2023 மார்ச் மாதத்தில் 24 சொந்த வாகனங்களுடன் பயணத்தை தொடங்கிய நிறுவனம் இன்று 1,400 வாகனங்களுடன் சேவையில் ஈடுபட்டுள்ளது. தூய்மையான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவை பிரிவில் அடுத்தகட்ட வளர்ச்சியை துடிப்புடன் முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு புதுப்பிக்கப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வலுவான தலைமைத்துவ நிர்வாக குழுவும் பொறுப்பேற்று உள்ளது. வாடிக்கையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பங்குதாரர்கள் என அனைவரிடத்திலும் ஆழமான நம்பிக்கையை விதைக்கும் வகையில் வாகனங்களின் தொகுப்பை உருவாக்குவதே ரீஃபெக்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு குறிக்கோளாகவும், செயல்திட்டமாகவும் உள்ளது. இவ்வாறு அனிருத் தெரிவித்தார்.