மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்குகள் 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலைஎன அழைக்க என்ன ஆதாரம் உள்ளது? ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்த அனுமதி உண்டா? நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி இருக்கிறதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு மனுதாரர்கள் தரப்பில், “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதால் மலையின் புனிதம் கெடும், தீட்டு ஏற்படும்” என வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், “தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது. தீட்டு என்பது சாதியிலோ, மதத்திலோ, மனிதர்களுக்குள்ளோ இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. மிகவும் பிரபலமான அழகர்கோவிலில் பதினெட்டாம்படி கருப்புக்கு கிடா வெட்டிய பிறகுதான் பெருமாளையே தரிசிக்க செல்கின்றனர்.
அவ்வாறு இருக்கும்போது எப்படி இது தீட்டாகும்? எனவே தமிழக அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது” என வாதிடப்பட்டது. மேலும் அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதி சிக்கந்தர் மலை என அழைப்பதற்கான வருவாய்த் துறை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தர்கா பகுதியில் ஆடு, கோழி பலியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை.
ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.13-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.