சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு வந்தார். இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினையும் 2 முறை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி மூலமாக, ஓபிஎஸ் சந்திப்பை நிகழ்த்தி அவரை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே, அவருக்கு எதிராக யாரும் இனி பொது வெளியில் பேசவோ, சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிடவோ கூடாது என்றும், விமர்சிக்கவும் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.