சென்னை: வெளிமாநில தமிழ் சங்கங்களுக்கு 40 ஆண்டுகளாக தமிழ் பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்ததை நிறுத்திவைப்பது கண்டனத்துக்குறியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு சுமார் நாற்பது ஆண்டுகளாக தமிழ்ப்பாடநூல்களை இலவசமாக விநியோகித்து வந்த திட்டத்தை நிதி நெருக்கடி எனக் காரணம் காட்டி திமுக அரசு நிறுத்திவைத்திருப்பது கண்டனத்துக்குரியது.
அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையால் அவதியுற்று வரும் வேளையில், அவர்களின் மீது மேலும் நிதிச்சுமையை ஏற்றுவது நியாயமா? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அயல் மாநிலங்களில் தமிழ் படிக்கும் ஏழை எளிய தமிழ் வம்சாவளி மாணவர்கள் தான் என்பது தெரியாதா, இதுதான் தமிழ் வளர்ச்சியில் திராவிட மாடல் கொண்டுள்ள அக்கறையா, கோபாலபுரம் தலைமுறையினரின் பகட்டு செலவுகளான பேனா சிலை, கார் ரேஸ், பிரச்சார நடனம், விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு நிதியை அள்ளித் தெளிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்களுக்கு வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ் தலைமுறையினரின் வறுமையும், தமிழ் வளர்ச்சியும் புலப்படாதது ஏனோ? அன்னைத் தமிழின் வளர்ச்சியில் அரசியலைத் தாண்டி உண்மையாகவே திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் உடனடியாக இம்முடிவைக் கைவிட்டு வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு பாடநூல்களை வழக்கம்போல இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.