உடுமலை / பொள்ளாச்சி: திருப்பூர் மாவட்டம் உடுமலை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று (ஆக.11) நடைபெறும் அரசு விழாக்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.949 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணி களை திறந்துவைத்தும், ரூ.182 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.295 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து, உடுமலை நேரு வீதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.
உடுமலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பொள்ளாச்சி செல்லும் முதல்வர், பிஏபி பாசனத் திட்டம் அமைய காரணமானவர்களான முன்னாள் முதல்வர் காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கு பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலைகளை திறந்துவைக்கிறார்.
இந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வர் சென்னையில் இருந்து நேற்று மாலை விமானத்தில் கோவை வந்தார். அவருக்கு திமுகவினர் வரவேற்பளித்தனர். தொடர்ந்து, காரில் உடுமலை சென்று, அங்கு இரவு தங்கினார்.