சென்னை: தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, செப்டம்பர் முதல் வாரத்தில் லண்டன், ஜெர்மனிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்வர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022 மார்ச்சில் துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள், 2024 தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அடுத்து இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இம்மாத இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் இப்பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர், பல்வேறு நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரி மாணவர்கள் கூட்டத்தில் முதல்வர் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனியில் அவர் 10 நாட்கள் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. முதல்வரின் முழுமையான பயணத் திட்டம் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.