மதன் பாப்பை இந்த உலகம் காமெடியனாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் அவர் ஒரு காமெடியன் அல்ல. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவர் ஒரு ரியல் ஹீரோவை போல் வாழ்ந்தவர்.
எப்போதும் விலை உயர்ந்த ஆடைகளையும், விலை உயர்ந்த காலணிகளையும், விலை உயர்ந்த காஸ்ட்யூம் பொருட்களையும், விலை உயர்ந்த சென்ட் வகைகளையும் உபயோகிக்கக்கூடிய ஒரு வாசனை மனிதர். சென்ட் வகைகளிலேயே 20 வகையான சென்ட்களை அவர் பயன்படுத்துவார். குறிப்பாக, படப்பிடிப்புக்குப் போகும்போது, காரில் பயணிக்கும் போது, விழாக்களில் கலந்து கொள்ளும் போது என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உடை அலங்காரம், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான சென்ட் ஆகியவற்றை பயன்படுத்துவது அவரது வழக்கம்.
இப்படி தன்னுடைய இருப்பை எப்போதுமே மற்றவரிலிருந்து மாறுபட்டவராகவும் எந்த விதத்திலும் தன்னை எவரும் குறைத்து மதிப்பிடாத வகையிலும் நடந்து கொள்வார். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், மிக மிக எளிமையான மனிதர்.
எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகக்கூடியவர். ஆனால், எல்லோரிடமும் அத்தனை எளிதாக பழகிவிடவும் மாட்டார். அவருடைய அன்பு வளையத்துக்குள் ஒருவர் வந்துவிட்டால், அவர் அதன் பிறகு ஆயுள் உள்ளவரை அவருடைய நட்பைத் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த நட்பையும் அன்பையும் தன்னோடு பழகியவர்களிடம் பேணக் கூடியவர்.
மதன் பாப்வின் நேர நிர்வாகம், கடின உழைப்பு, தொழிலின் நேர்மை இவற்றையெல்லாம் எவரோடும் ஒப்பிட முடியாது. எத்தனை தொலைவில் படப்பிடிப்பு இருந்தாலும் தன்னந்தனியே தானே தன்னுடைய காரை ஓட்டிச் சென்று, சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். தப்பித் தவறி ஏதாவது டிராபிக் ஜாமில் கார் தாமதமானாலும், உடனே அதற்கு ஸாரி கேட்பார்.
அவருடைய நட்பு வட்டமோ மிகவும் சிறியதுதான். ஆனால், அந்த சிறிய நட்பு வட்டத்தில் மிக உண்மையாகவும் நேர்மையாகவும் பழகக் கூடியவர். அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அத்தனை பேருமே பெரும் செல்வந்தர்கள், செல்வ சீமான்கள், கோடீஸ்வரர்கள். அடையார் ஆனந்தபவன் சகோதரர்கள், செவன்த் சேனல் நாராயணன், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, சுராஜ், அமரர் எஸ்.பி.பி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என அந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. ஆனால், எவரிடமும் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய சூழ்நிலை கருதி, ஒருபோதும் உதவியோ கடனோ இலவசமாகவோ அவர் எதையும் கேட்கமாட்டார்.
தப்பித்தவறி கைமாற்றாக பணம் தேவைப்பட்டால் அவர்களுக்கு இணையாக கொடுக்கல் வாங்கலில் நடந்து கொள்ளக் கூடியவர். அவர் நினைத்திருந்தால், எப்படி எப்படியோ தன் வாழ்க்கைச் சூழலில் கரோனா காலத்தில், திரைத்துறையை நெருக்கடி சூழ்ந்த நேரத்தில் கொஞ்சம் தலை தாழ்ந்து போயிருந்தால் மிகப்பெரிய அளவில் வந்திருக்க முடியும். நிலைகுலைந்தாலும் மலை குலையாத அவரது தன்னம்பிக்கையும் தைரியமும் அவரை விட்டு கடைசி வரை விலகவே இல்லை.
ஆன்மிகம், இசை, ஜோதிட சாஸ்திரம், மருத்துவ சாஸ்திரம், சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், நடிப்பு, பேச்சாற்றல், நகைச்சுவை என தான் தொட்ட துறைகளில் எல்லாம் மிகுந்த ஈடுபாட்டுடனும் நேர்மையுடனும் செயல்பட கூடியவர்.
நம்மில் பலருக்கு தெரியாத ஒரு செய்தி அவர் தனது நூலகத்தில் கிட்டதட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். அவற்றில் பெரும்பானவற்றை அவர் வாசிக்கவும் செய்தார். ஆதித்யா டிவியில் அவர் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்திய போது, ஆறு ஆண்டுகள் அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பு பணிகளில் நான் பணியாற்றி இருக்கிறேன். ஒரு பொன்மொழி, மூன்று நகைச்சுவைத் துணுக்குகள், ஒரு குட்டிக்கதை என இடையிடையே திரைப்பட பாடல்கள் உடன் ஒரு மணி நேர நிகழ்ச்சி அது. அதற்கு பெரிய அளவில் அப்போது 2008 முதல் 2013 வரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பெரும் செல்வாக்கு உள்ள நிகழ்ச்சியாக ப்ரைம் டைமில் ஒலிபரப்பானது. அதற்கான முன் தயாரிப்புகளில் மிகவும் கவனமாக இருப்பார்.
அதேபோல் தன்னுடைய நண்பர்கள் வட்டம், ஒருவர் தன் வீட்டு வேலைக்கு வரும் பிளம்பராக இருந்தாலும் எலக்ட்ரீசியன் ஆக இருந்தாலும் டிரைவராக இருந்தாலும் உதவியாளராக இருந்தாலும் ஏ.சி. மெக்கானிகாக இருந்தாலும் என அனைவரையுமே கண்ணியமான ஒரு ஊழியராக நடத்துவார். அவர்கள் விரும்பியதற்கு மேலான கூலியையும் அதற்குண்டான பரிசுப் பொருட்களையும் கொடுத்து எப்போதும் அனுப்புவார்.
இவற்றையெல்லாம் தாண்டி, தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால், கிட்டதட்ட ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய்க்கு பட்டாசு, ஸ்வீட் வகைகள் வாங்கி, தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் அவற்றை கொடுப்பதுடன் புத்தாடைகளையும், நெருங்கிய நண்பர்களுக்கு மதுபான வகைகளையும் கேக் வகைகளையும் ஸ்வீட் பாக்ஸ்களையும் பரிசாக வழங்குவார்.
இவரது இந்த குணத்தில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், சிலரை சந்தித்து தன்னால் கொடுக்க முடியாவிட்டால், அவர்களது வீட்டுக்கே அவற்றை அனுப்பி வைத்து, கிடைத்து விட்டதா என்பதை போனில் உறுதிப்படுத்திக் கொள்வார். எம்.ஜி.ஆரையும் சாவித்திரியையும் விஜயகாந்தையும் மிகச் சிறந்த வள்ளல்களாக திரையுலகம் சொல்கிறது. உண்மையில், இவர் மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்த நன்கொடைகள் கொடுத்த பரிசு பொருட்கள் ஏராளம் ஏராளம்.
என்னவோ தெரியவில்லை திரைப்படத்துறையினர் கொத்தாக வசிக்கக்கூடிய கோடம்பாக்கத்தில், கே.கே. நகரில், வடபழனியில், சாலிகிராமத்தில் இவரது அலுவலகமும் இல்லை, வீடும் இல்லை. இதுதான் நான் பார்த்த வகையில், அவரிடமிருந்த ஒரு குறைபாடு. இதை நான் அவரிடம் பலமுறை வலியுறுத்தியும் சொல்லி இருக்கிறேன். அவரைப் பொறுத்தளவில் ‘ஒன் மேன் ஷோ’தான். ‘நான் எங்கு இருக்கிறோனோ அதுதான் என்னுடைய அலுவலகம்’ என்பார். அந்த அளவு மிகுந்த தன்னம்பிக்கையோடு பல விஷயங்களைச் செய்தவர்.
இவற்றைத் தவிர, ‘பிளாக் அண்ட் ஒயிட்’ என்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து, அன்னக்கிளி வரையிலான பழைய பாடல்களில் தேர்ந்த முத்துக்களான பாடல்களைப் பாடி, அவர்களும் அவரது குடும்பத்தாரும் ‘மதனோத்சவம்’ என்ற நிகழ்ச்சியை நடத்துவார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இவர் மீது மாறாத அன்பினை கொண்டவர். இவர் கேட்கும் போதெல்லாம் இவர் இசை நிகழ்ச்சி நடத்த அவர் தனது பங்களிப்பை தருவார். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி அவர்களுக்குள் ஒர்க்கவுட் ஆகியிருந்தது.
இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பாக ஒரு வாரத்திற்குள் மூன்று முறை ஒரு பள்ளிக்கூடத்தையோ கல்யாண மண்டபத்தையோ வாடகைக்கு எடுத்து அரங்கேற்றி, ஒத்திகை பார்ப்பார். ஒத்திகையில் எவர் தவறு செய்தாலும் மிகுந்த கடுமையோடும் கண்டிப்போடும் நிகழ்ச்சி நல்ல முறையில் வர பெரும் பாடுபடுவார். தூங்கவே மாட்டார். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியை குறித்த சிந்தனையிலேயே இருப்பார்.
இப்படி எல்லாம் செய்து அந்த நிகழ்ச்சியை வர்த்தக ரீதியாக நடத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார். தனக்கு மிகவும் பிடித்த ஒரு எலைட் பீப்பிள்ஸ் 600 பேர் வந்தால் போதும் என்று நினைப்பார். பலமுறை அப்படியே அந்த நிகழ்ச்சியை நடத்தினார். அவர் நினைத்திருந்தால் பெரிய அளவில் அந்த நிகழ்ச்சியில் வருமானங்களைப் பார்த்திருக்க முடியும். ஏனோ தெரியவில்லை தனக்கு வரும் கூட்டத்தினர், தன் இசையை சரியாக உள்வாங்கினால் போதும் என்கிற ஒரே சிந்தனையோடு அவற்றை நடத்துவார்.
30 ஆண்டுகளாக அவர் வீட்டில் ஒருவனாக அவரது சீடனாக நண்பனாக அவருடன் பயணித்தவன் நான். என் வாழ்க்கையில் நான் அதிகம் பேசியதும் ரசித்ததும் உங்களுடன்தான் என்று என்னிடம் பலமுறை அவர் கூறி இருக்கிறார். அதைவிட மிகப் பெரிய பாக்கியம் வேறில்லை. எனக்கு அவரே என் ஞான குரு.
குழந்தை போன்ற மனமும் ஞானியை போன்ற செயல்பாடுகளும் அவருக்கே உரித்தானவை. பொதுவாக பல்துறை விற்பன்னர்கள் என்று சொல்லும் போது வரலாற்றில் லியனார்-டோ-டார்வின்சியைச் சொல்லுவார்கள். அவர் எல்லா துறைகளிலும் எழுத்து பேச்சு ஓவியம் என பல்துறை விற்பன்னராக திகழ்ந்தவர். அப்படி மதன்பாப் அவர்களும் எல்லா துறைகளிலும் தேர்ந்து விளங்கியவர். அவர் சிறந்த இசையமைப்பாளர்.
இசையில் கிடாரை மிகச் சிறப்பாக வாசிக்க கூடியவர். நல்ல நடிகர். நல்ல மோட்டிவேஷன் ஸ்பீக்கர். நல்ல மகிழ்ச்சி வியாபாரி (ஹேப்பி செல்லர்). அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷம் நிறைந்திருக்கும், அவரும் சந்தோஷமாக இருப்பார். அந்த விஷயத்தில் அவர் ஒரு நைட்ரஸ் ஆக்ஸைட். சிரிக்கும் அதை முகர்ந்து பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி அவர் சிரிப்பு எல்லோரையும் சிரிக்க வைக்கும்.
ஓஷோ கூறியது போல், ‘லைப் இஸ் ஏ செலிப்ரேஷன்’ என்ற வார்த்தைகளுக்கு அவரே ஆகச்சிறந்த உதாரணம். அப்படி ஒவ்வொரு வாழ்வின் முக்கியமான தருணங்களை மிகவும் மகிழ்ச்சி உள்ளதாக மாற்றக்கூடிய வலிமையும் வல்லமையும் உள்ளவராக இருந்தார்.
– கதிரேசன்