திருப்பூர்: 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்க உள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் மணீஸ் நாரணவரே வரவேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு நினைவு பரிசினை வழங்கினார். உடன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் ரூ.949 கோடியே 53 லட்சத்தில் 61 முடிவுற்ற பணிகள் திறப்பும், ரூ.182 கோடியே 6 லட்சத்தில், 35 புதிய திட்டப் பணிகளுக்களுக்கான அடிக்கல் நாட்டுதல், ரூ.295 கோடியே 29 லட்சத்தில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்கியும், திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சினிமா துறையில் 10,000 பாடல்களை எழுதிய கவிராயர் உடுமலை நாரயணகவி, அரசு கலைக் கல்லூரி அமைய காரணமாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்ஷா உள்ளிட்டோரை தந்தது உடுமலை மண். இயற்கை, இலக்கியம், கல்வி, அரசியல் என பல துறைகளிலும் கோட்டையாக உடுமலைப்பேட்டை இருந்து வருகிறது.
திமுக ஆட்சி காலங்களில் தான் மேற்கு மண்டலத்துக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர் என தன்னை காட்டிக்கொண்டபோதும், அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் திராவிட மாடல் அரசு இப்பகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செய்யும். 2026 தேர்தல், நிச்சயமாக அதிமுகவின் தேர்தல் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கப் போகிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் நலத்திட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் சிவி சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, நீதிமன்றங்களை அரசியல் மேடையாக ஆக்காதீர்கள் என கூறியது. இது அவர்களுக்கு கேவலமாக இல்லையா? அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக அரசு அளித்துள்ள பட்டியல் படி முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
என்னை பொருத்தவரை பேச்சைக் குறைத்துக்கொண்டு செயலில் காட்ட வேண்டும். அந்த வகையில் பிஏபி பாசன விவசாயிகளின் கோரிக்கையான நீரார்- நல்லார் அணைத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே கேரளா, தமிழகம் ஆகிய இரு மாநில அரசு துறைகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பிஏபி திட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பாசன கால்வாய்களை தூர் வார இந்த ஆண்டே ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பூர் மாநகரில், ரூ.9 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம், ரூ.5 கோடி செலவில் பல்நோக்கு விளையாட்டரங்கம், காங்கயம் பகுதியில் குடிநீர் வடிகால் பணிகளுக்காக ரூ. 11 கோடி, தாராபுரம் அருகே உப்பாற்றின் குறுக்கே ரூ.7.5 கோடியில் தடுப்பணை, ஊத்துக்குளியில் ரூ.6.5 கோடி செலவில் வெண்ணெய் தொழிற்சாலை, உடுமலையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்ஷா பெயர், பைபாஸ் சாலைக்கு சூட்டப்படும்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதையடுத்து உடுமலை நகர கட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின் பொள்ளாச்சிக்கு கிளம்பி சென்றார். முன்னதாக தான் தங்கியிருந்த இல்லத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் நேதாஜி மைதானம் வரை சுமார் 1 கி.மீ., தொலைவுக்கு நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்வில் பங்கேற்றார். அப்போது வேனை விட்டு இறங்கிய அவர் அங்கிருந்து சாலையில் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் இடையே வணக்கம் தெரிவித்தப்படி நடந்து வந்தார்.
விழாவில் 10,000 த்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த பயனாளிகள் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர். பயனாளிகள் வந்த வாகனங்கள் வந்து செல்ல மத்திய பேருந்து நிலையத்தில் இடவசதி செய்து தரப்பட்டிருந்தது.
அதனால் மத்திய பேருந்து நிலையத்துக்கு வரும் உள்ளூர், வெளியூர் பேருந்துகள், தாராபுரம் சாலையில் உள்ள சிவசக்தி காலனியில் கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து நகருக்குள் செல்ல சுமார் 2 கிமீ தொலைவுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் நடந்து செல்ல நேரிட்டது.
முதல்வர் வருகையை முன்னிட்டு தனியார் பள்ளிகளுக்கு அறிவிக்கப்படாத விடுமுறை விடப்பட்டது. பெரும்பாலான பள்ளி வாகனங்கள் பயனாளிகள் வந்து செல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ரோடு ஷோ குறித்த முன் அறிவிப்பு இல்லாமல் காலையில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் சில இடங்களில் மக்கள் கூட்டம் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.