சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணவர்கள் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் 20.08.2025 வரை நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடங்கும். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம்.
மேற்படி இணையதள முகவரியில் 20.08.2025 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2025 அன்று வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் துவங்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.