சென்னை: டிடிகே சாலை ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் சீனிவாசா சாலை வரை இன்றுமுதல் (11-ம் தேதி) மழைநீர் வடிகால் பணி நடைபெற இருப்பதால், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச் சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், டிடிகே சாலையில் மியூசிக் அகாடமி நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முர்ரேஸ் கேட் சாலை வழியாகச் சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாகச் சென்று இலக்கை அடையலாம்.
டிடிகே சாலையில் மயிலாப்பூர் நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி லஸ் சர்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பி.எஸ்.சிவசாமிசாலை வழியாக இலக்கை அடையலாம். போக்குவரத்து காவல் துறை இவ்வாறு தெரிவித்துள்ளது.