சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், பயணிகள் அனைவருக்கும் கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, இன்றுமுதல் (ஆக. 11) வரும் 15-ம் தேதி வரை இணையதளம், செல்போன் ஆப், டிக்கெட் கவுன்ட்டர்கள் உட்பட அனைத்து விதங்களிலும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான கட்டணம் ரூ.1,279 முதலும், வெளிநாடுகளுக்கான கட்டணம் ரூ.4,279-ல் இருந்து தொடங்குகிறது. அதேபோல், லக்கேஜ்களை கொண்டு செல்லும் பயணிகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டணச் சலுகை டிக்கெட்களை முன்பதிவு செய்யும் பயணிகள் வரும் 19-ம் தேதி முதல் 2026 மார்ச் 31-ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான நாட்களில் பயணம் மேற்கொள்ளலாம். இதன் மூலம், சுமார் 50 லட்சம் பயணிகள் பயன்பெற வாய்ப்புள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.