புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். காலை 11.30 மணியளவில் இந்தப் பேரணி நடைபெறவிருக்கிறது.
இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆனால், இந்தப் பேரணிக்கு டெல்லி போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், இந்தப் பேரணிக்காக இண்டியா கூட்டணி சார்பில் முறையாக அனுமதி கோரியும் விண்ணப்பிக்கப் படவில்லை என டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருபினும், இண்டியா கூட்டணி இந்தப் பேரணிக்கு தயாராகி வருவதாகவும் பேரணியில் ஆங்கிலம், இந்தி, தமிழ், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பிஹாரில் நடைபெறு சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகள் ஏந்திச் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், நேற்று அவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “வாக்கு திருட்டு என்பது ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை நோக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். தெளிவான வாக்காளர் பட்டியல் என்பதுதான், நேர்மையான சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யும். தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை எல்லாம் தெளிவாக உள்ளது. தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட வேண்டும்.
மின்னணு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் அதை ஆய்வு செய்ய முடியும். எங்களுடைய இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரச்சாரம் தொடங்குகிறோம். அதற்காக ‘ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைக்கிறோம். அத்துடன் 96500 03420 என்ற செல்போன் எண்ணையும் வெளியிடுகிறோம். இணையதளத்தில்பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறி, பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும். செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்சாரத்தில் இணையலாம்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று பிரம்மாண்டப் பேரணி நடைபெறவுள்ளது.