பழநி: பழநி அருகே நேற்று நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப் பாய்ந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தின. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள கொழுமங்கொண்டான் கிராமத்தில் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் அர.சக்கரபாணி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பெரிய காளைகள், சிறிய காளைகள் என 2 வகைகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
பெரிய காளைகளுக்கு 300 மீட்டர் தூரமும், சிறிய காளைகளுக்கு 200 மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற்றன. இதில், கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒன்றரை பவுன் தங்க நாணயம், 2-வது பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், 3-வது பரிசாக முக்கால் பவுன் தங்க நாணயம் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.