சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 6 முக்கிய நாட்களில் தமிழகத்தில் உள்ள 12,482 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். இக்கூட்டங்களின் வாயிலாக, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
அந்த வகையில், வரும் ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது: க.15ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை அவர்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும். மதச்சார்புள்ள எந்த இடத்திலும் கூட்டம் நடத்தப்படக் கூடாது. கடந்த 2024 ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலான காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்த அறிக்கை கூட்டத்தில் படிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
சுத்தமான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனைப்பிரிவு, கட்டிட அனுமதிகள், சுய சான்று அடிப்படையில் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு உடனடி பதிவு மூலம் அனுமதியளித்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றை அடிப்படையாக கொண்டு கட்டிட அனுமதி பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2,500 சதுரஅடிக்கு குறைவான மனைப் பரப்பில் 3,500 சதுரஅடி வரை தரைத்தளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொதுக் கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.