புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், ராகுல் காந்தி தார்மிக அடிப்படையில் தனது எம்பி பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்கள் மீது நம்பிக்கை இல்லை என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அதோடு, இந்திய தேர்தல் ஆணையம் கோரியபடி, புகார் கடிதம் மற்றும் ஆவணத்தை வழங்கவும் மறுக்கிறார்.
அப்படியானால், தார்மிக அடிப்படையில் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தியும் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்கள் உயர் நீதிமன்றம், உச்சி நீதிமன்றம் அல்லது மக்கள் மன்றத்துக்குச் செல்ல வேண்டும். காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதால், காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
உங்களுக்கு சவுகரியம் என்றால் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். சிரமம் என்றால் நிராகரிக்கிறீர்கள். இத்தகைய அணுகுமுறை வேலை செய்யாது. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பாரபட்சமற்ற அமைப்பு என்ற நற்பெயரை ஈட்டியுள்ளது. கடந்த கால உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அதை உறுதிப்படுத்துகின்றன.
‘வாக்கு திருட்டு’ என்ற ராகுல் காந்தியின் கூற்று உண்மையற்றது. அராஜகமாகப் பேசக்கூடியவர் என அறியபபடும் ராகுல் காந்தி, தற்போது அழிவை ஏற்படுத்துபவராக ஆகிவிட்டார். அவர் இந்திய அரசியலமைப்பையும் இந்திய ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புகிறார். முதிர்ச்சியற்றவரான ராகுல் காந்தி, இந்திய தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதன் மூலம் அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு எதிராகப் போரைத் தொடங்கியுள்ளார்” என்று அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற் றுமுன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குகள் திருடப்பட்டுள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி அவற்றுக்கு சில ஆதாரங்களை திரையிட்டு காட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டது உண்மையென உறுதிமொழி பத்திரத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு தரவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. இதனிடையே, ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தேர்தல் ஆணையத்திடம் 5 கேள்விகளை கேட்டுள்ளார். அவை:
1. மின்னணு வாக்காளர் பட்டியலை ஏன் எதிர்க்கட்சிகளுக்கு தருவதில்லை: எவற்றை மறைக்கிறீர்கள்?
2. தேர்தல் முடிந்து 45 நாட்களில் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளை ஏன் அழிக்கிறீர்கள்?
3. கள்ள வாக்குகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றம் ஏன்?
4. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவது ஏன்?
5. பாஜக.வின் ஏஜென்டாக தலைமை தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா என்பதை எங்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி கேள்விகள் கேட்டுள்ளார்.