சென்னை: தூய்மைப் பணியை தனியாரிடம் வழக்கும் விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டு, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே 10 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, ராயபுரம், திரு.வி.க ஆகிய 2 மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தனியார்மயமாதலை கைவிடக் கோரியும், தற்காலிகமாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 7-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தம் மற்றும் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
நேற்று முன்தினம் அமைச்சர் கே.என்.நேருவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. தொடர் வேலை நிறுத்தத்தால், இரு மண்டலங்களிலும் குப்பைகள் சாலைகளில் குவியல்களாக கிடக்கின்றன. அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக உழைப்போர் உரிமை இயக்கம் செயல்பட்டு வருகிறது.
மேலும், நேற்று பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜன், இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்க மாநில தலைவர் அன்புவேந்தன், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “மத்திய அரசின் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த எஸ்சி தூய்மை பணியாளர்களின் வேலை பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆணையம் சார்பில், மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “புகார்தாரர் தெரிவித்துள்ளதன் உண்மை நிலை, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காவிட்டால், நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.