புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் ஆன்லைனில் அல்லது முன்பதிவு கவுண்டர்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இருப்பினும் ஆன்லைனில் முன்பதிவு செய்து, பயணம் உறுதி செய்யப்படும் மற்றும் ஆர்ஏசி பயணிகளுக்கு மட்டுமே காப்பீட்டு சலுகை கிடைக்கும். காப்பீட்டு சலுகையை பெறவிரும்பும் எந்தவொரு பயணியும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தை (Optional Travel Insurance Scheme – OTIS) தேர்வு செய்யலாம்.
இதற்கு தற்போது ஒரு பய ணிக்கு, ஒரு பயணத்துக்கு, அனைத்து வரிகள் உட்பட வெறும் 45 பைசா பிரீமியம் செலுத்தினால் போதுமானது. பிறகு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து நேரடியாக இப்பயணிகளின் மொபைல் அல்லது மின்னஞ்சல் ஐடிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் பாலிசி தொடர்பான விவரம் வந்துசேரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.