சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 19 சிறந்த கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் ஒரு சர்வதேச மாஸ்டர் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 கோடி ஆகும். மேலும் இந்தத் தொடர் மதிப்புமிக்க ஃபிடே சர்க்யூட் புள்ளிகளையும் வழங்குகிறது. இந்த புள்ளிகள் 2026 கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எம்ஜிடி1 நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னைகிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டி, மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. இரு பிரிவிலும் தலா 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் ரவுண்ட்-ராபின் முறையில் நடத்தப்படுகிறது.
போட்டியின் தொடக்க நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு முதல்சுற்றில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்களான வி.பிரணவ், கார்த்திகேயன் முரளி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டம் 44-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான அவோண்டர் லியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய உலகின் 5-ம் நிலை வீரரான அர்ஜுன் எரிகைசி 49-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்று முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார்.
நெதர்லாந்தின் அனிஷ் கிரி, அமெரிக்காவின் ரே ராப்சன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. வெள்ளை காய்களுடன் அனிஷ் கிரி விளையாடிய நிலையில் 59-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமருடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய நிஹால் சரின் 52-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. விதித் குஜராத்தி வெள்ளை காய்களுடனும், ஜோர்டன் வான் பாரஸ்ட் கருப்பு காய்களுடனும் களமிறங்கினார்கள். 48-வது நகர்த்தலின் போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சேலஞ்சர்ஸ் பிரிவு முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான எம்.பிரனேஷ், ஆர்யன் சோப்ரா ஆகியோர் மோதினர். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய எம்.பிரனேஷ் 26-வது நகர்த்தலின் போதுவெற்றி பெற்றார். இதனால் எம்.பிரனேஷ் முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார்.
அபிமன்யு புராணிக், அதிபன் பாஸ்கரன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அபிமன்யு புராணிக் வெள்ளை காய்களுடனும், அதிபன் பாஸ்கரன் கருப்பு காய்களுடனும் களமிறங்கினர். இந்த ஆட்டம் 46-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான லியோன் லூக் மென்டோன்கா, சர்வதேச மாஸ்டரான ஜி.பி. ஹர்ஷவர்தனுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய லியோன் லூக் மென்டோன்கா 47-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதனால் அவர், முழுமையாக ஒரு புள்ளியை பெற்றார்.
இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.வைஷாலி – பா.இனியன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் வைஷாலி வெள்ளை காய்களுடன் மோதினார். இந்த ஆட்டம் 57-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. முன்னணி வீராங்கனையான இந்தியாவின் துரோணவல்லி ஹரிகா தனது முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். திப்தாயன் கோஷுக்கு எதிராக வெள்ளை காய்களுடன் விளையாடிய ஹரிகா 44-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார்.