சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி காலமானார். அவரது 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.அதையொட்டி, திமுக சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் அண்ணா சாலையில் நேற்று அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரணிக்கு தலைமை வகித்தார்.
முன்னதாக அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதி சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர், காலை 8.30 மணியளவில் பேரணி தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் முன்னே செல்ல, நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்தனர்.
சுமார் 40 நிமிடங்களில் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தை பேரணி சென்றடைந்தது. நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் முதல்வர் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அருகே உள்ள அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி, கே.என்.நேரு, எ.வ. வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.,க்கள், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், தாயகம் கவி உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ் நாடு வீட்டு வசதிவாரியத் தலைவர் பூச்சி முருகன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு பிரிவு தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, முரசொலி அலுவலகம், கோபாலபுரம், சிஐடி காலனி இல்லங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு முதல்வர்ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், ராஜாத்தி அம்மாள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
புதுடெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திருச்சி சிவா, திருமாவளவன், துரை ரவிக்குமார், கதிர் ஆனந்த், கனிமொழி என்.வி.என்.சோமு, துரை வைகோ உள்ளிட்ட எம்.பி.க்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “திமுக தலைவர் கலைஞர் முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்கு தந்த பிறப்பு. பெரியாரும் முன்னாள் முதல்வர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு. அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழகத்தைக் காத்து முன்னேற்ற உறுதியேற்று, அவரது ஒளியில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ – ‘எதிலும் தமிழகம் முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.