நடந்து முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கோப்பையை இங்கிலாந்துக் கைப்பற்ற விடாமல் இந்திய அணி ஓவலில் காவிய வெற்றி பெற்று தொடரை 2-2 சமன் செய்துள்ளது. இந்தத் தொடரில் இந்திய வீரர்களின் தனிப்பட்ட திறன்களை சச்சின் டெண்டுல்கர் மதிப்பாய்வு செய்துள்ளார். இதில் முகமது சிராஜுக்கு அவருக்கேயுரிய பெருமைகள் கிடைப்பதில்லை என்று வருந்தியுள்ளார்.
இந்தத் தொடரில் 1113 பந்துகளை வீசியுள்ளார் சிராஜ், இவர்தான் அதிக ஓவர்களை வீசியவராவார். 23 விக்கெட்டுகளுடன் இரு அணிகளிலும் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேட்ச் வின்னராகத் திகழ்கிறார் சிராஜ். பும்ரா இல்லாத 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிராஜ் அதியற்புதமாக வீசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், சிராஜைப் புகழ்ந்து கூறுகையில், “நம்ப முடியாத பவுலிங், அருமையான அணுகுமுறை. அவரது இந்த அணுகுமுறை எனக்கு நிரம்பவும் பிடித்திருக்கிறது.
அதுவும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் தொடர்ந்து நம் எதிரில் வந்து மோதுகிறார்… நிற்கிறார், சவால் விடுகிறார் என்படு அவ்வளவு சுலபமல்ல. இதை எந்த பேட்டரும் விரும்ப மாட்டார்கள். அதுவும் கடைசி நாள் அந்தக் கடைசி பந்து வரை சிராஜ் காட்டிய அணுகுமுறை அதுவும் 1000 பந்துகளை தொடரில் வீசி முடித்த பிறகு வர்ணனையாளர்கள் அவர் மணிக்கு 90 மைல் வேகம் வீசுகிறார் என்று கூறும்போது அவரது தைரியமும் பரந்த இதயமும் அவரது விடாத அந்த அணுகுமுறையை நமக்குப் பறைசாற்றுகிறது.
அதுவும் கடைசி நாளை அவர் தொடங்கிய விதம் அருமை. எப்போதெல்லாம் சிராஜ் தேவை என்று நினைக்கிறோமோ அப்போதெல்லாம் வந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். அதுவும் நாக்-அவுட் பஞ்ச் தேவைப்படும் போதெல்லாம் சிராஜ் தான் வந்து நிற்கிறார். அவர் விக்கெட்டுகளை எடுத்த விதமும் இந்தத் தொடரில் அவர் செயல்பட்ட விதமும் அவருக்குரிய பெருமைகள் அவருக்குக் கிடைப்பதில்லை என்றே கருத வேண்டியுள்ளது.” என்று வருந்தியுள்ளார் சச்சின்
அதே போல் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பயமற்ற பேட்டிங் அணுகுமுறையையும் தான் மிகவும் விரும்புவதாக சச்சின் பாராட்டியுள்ளார். முதல் டெஸ்ட் சதம் பந்துகள் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்விங் ஆகாத போது எடுத்தாலும் அது ஒரு முக்கியமான சதம், கடைசி டெஸ்ட்டில் கடினமான பிட்சில் 2வது இன்னிங்ஸில் எடுத்த சதம் அவரது முதிர்ச்சி, அர்ப்பணிப்புணர்வை எடுத்துக் காட்டியது.
அதுவும் நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப்பை ஆட வைத்து தன்னை உறுதுணை பேட்டராக மாற்றிக் கொண்டது அருமையான ஒரு அணுகுமுறை. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இது ஒரு நல்ல தொடர். அவர் பேட்டிங் ட்ரீட் டு வாட்ச் என்றார் சச்சின்.