சென்னை: கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றும் (ஆக. 7), நாளையும் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9-ம் தேதி சில இடங்களிலும், 10 முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.